தற்கொலை செய்தவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: மனித உரிமை ஆணையம்
சென்னை: போஸாரின் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமை ஆணையத்தில் கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது உறவினர் கிருஷ்ணன், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். அது தொடர்பான விசாரணைக்காக கடந்த 2006ம் ஆண்டில், 3 போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் எனது வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்தனர்.
கிருஷ்ணனுக்கும் எனது குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தும் போலீஸார் விடாமல் தொடர்ந்து விசாரித்தனர். குடும்பத்தினரிடமும் விசாரணை செய்தனர்.
இதில் எனது மகன் நெல்சனையும் போலீஸார் விடவில்லை. பி-7 போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பி-3 போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அன்பரசன் ஆகிய தலைமை காவலர்கள், விசாரணை என்ற பெயரில் நெல்சனை சித்ரவதை செய்தனர்.
இதனால் நெல்சன் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தலைமை காவலர்கள் இருவரும் மறுத்துள்ளனர். விசாரணை முடித்துவிட்டு வீட்டுக்குச சென்ற நெல்சனுக்கும் அவரது தாயாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதனால் அவர் இறந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
இந்த வழக்கில் ஆணைய தலைவரும் நீதிபதியுமான வெங்கடாசல மூர்த்தி மற்றும் உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
போலீஸார் தினமும் நெல்சனின் வீட்டுக்கு சென்றுள்ளது தெளிவாக தெரிகிறது. விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளனர். அதில் நெல்சனை அதிகமாகவே சித்ரவதை செய்துள்ளனர். போலீஸாரின் சித்ரவதையால் தற்கொலை செய்த நெல்சனின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
ஏற்கனவே நிவாரண உதவி அளிக்கப்பட்டிருந்தால், தற்போது விதித்துள்ள தீர்ப்பின்படி மீதி பணத்தை வழங்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவர்கள் இருவரிடம் இருந்தும் தலா ரூ.25,000த்தை தவணை முறையில் வசூலிக்க வேண்டும் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications