உள்நாட்டு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்-பிரதமர் திட்டம்?
உள்நாட்டு பாதுகாப்புப்பை கண்காணிக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் செயல்பாட்டின் மீது பிரதமர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு திருப்தி இல்லை. அவரை மாற்றுமாறு லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில கூட்டணிக் கட்சி தலைவர்களும் மூத்த அமைச்சர்கள் சிலரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை நெருக்கி வருகின்றனர்.
ஆனால், சோனியாவின் கருணைப் பார்வை உள்ளதால் சிவராஜ் பாட்டீல் தப்பி வருகிறார்.
இந் நிலையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை உருவாக்காலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி கூட்டியுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் இன்று உரையாற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து பேசுவார் எனத் தெரிகிறது.
சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி இணையமைச்சகத்தை உருவாக்கினார். சுபோத் காந்த் சகாய் அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அந்தத் துறை கைவிடப்பட்டு, உள்துறையே உள்நாட்டு பாதுகாப்பையும் கவனித்து வந்தது.
சோனியா உத்தரவிட்டால் ராஜினாமா-சிவராஜ்:
இந் நிலையில் தனியார் டிவிக்கு பேட்டியளித்த சிவராஜ் பாட்டீல்,
கட்சி மேலிடத்தின் ஆசி இருப்பதால் தான் நான் பதவியில் நீடிக்கிறேன். கட்சி மேலிடம் விரும்பாவிட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்றார்.
டிரஸ்சில் கவனம்:
இதற்கிடையே டெல்லியில் குண்டுவெடிப்புகள் நடந்த தினத்தன்று அடுத்தடுத்து சில டிவிக்களுக்கு பேட்டிளித்தார் பாட்டீல். அப்போது ஒவ்வொரு டிவியிலும் ஒவ்வொரு உடையில் இருந்தார்.
குண்டு வெடித்து பாதித்த நேரத்தில் கூட அவரது டிரஸ் மாற்றும் ஆர்வம் குறித்து எரிச்சலுடன் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து பாட்டீல் கூறுகையில், நான் எப்போதும் சுத்தமான ஆடையணிபவன். முடிந்தால் என் கொள்கையை எதிர்த்து விமர்சிக்கட்டும், மாறாக என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று கோபமாகக் கூறியுள்ளார்.
சிவராஜை மாற்ற பாஜக கோரிக்கை:
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப்ரூடி கூறுகையி்ல், சோனியாவுக்கு விசுவாசமாக இருப்பதால் சிவராஜ் பதவியில் நீடிக்கிறார். தேசிய பாதுகாப்பில் அவருக்கு எவ்வித பங்களிப்பும் இல்லை. பாதுகாப்பு குளறுபடிக்கு பிரதமரும், பாட்டீலும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிக்க தவறிவிட்ட பின்னும், சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக தொடர வேண்டுமா என்பதற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.