'கிரீமி லேயர்' வரம்பு- பிரதமருடன் பாலு சந்திப்பு
டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை (கிரீமி லேயர்) உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டை 3 ஆண்டுகளில் படிப்படியாக அமலாக்கவும், இதனால் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படாத வகையில், கூடுதல் இடங்களை உருவாக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தனது அறிக்கையை கடந்த ஜூலை 1ம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது.
அதில், உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமி லேயர்) ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக உள்ளதை ரூ.4.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையை உடனடியாக அமலாக்கி அதிக அளவிலான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிலையங்களில் சேர வழி வகையை உருவாக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார்.
இந் நிலையில் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி, வருமான உச்சவரம்பை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை இந்த மாதம் 29ம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த ஒப்புதலைப் பெற்றால்தான், உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு 29ம் தேதி விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு உரிய பதிலை அளிக்க முடியும் என்பதை பாலு சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்காக, பாலுவிடம் பிரதமர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications