கூட்டணி முடிவு- ஜெவுக்கு அதிமுக பொதுக்குழு அதிகாரம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை அருகே உள்ள வானகரம், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடந்தது.
பொதுக் குவுக் கூட்டத்திற்கு அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில், அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்புரை நிகழ்த்தினார். பாலகங்கா எம்.பி. தொகுப்புரை ஆற்றினார்.
தீர்மானங்களை மீனவர் பிரிவு செயலாளர் டி.ஜெயக்குமார் வாசித்தார். கட்சியின் வரவு, செலவு மற்றும் கணக்கு விவரங்களை பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினார்கள். இதனையடுத்து பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
57 பேருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், மத போதகர் டி.ஜி.எஸ். தினகரன், அண்ணாவின் மகன் சி.என்.ஏ. பரிமளம், வயலின்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், பீல்டு மார்ஷல் மானக்ஷா, நடிகைகள் தேனி குஞ்சரம்மாள், டி.பி. முத்துலட்சுமி, எம்ஜிஆரின் உறவினர் விஜயன் ஆகியோருக்கும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் பேரூர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 57 அதிமுகவினருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெ.வுக்கு நன்றி-வாழ்த்து-பாராட்டு:
பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக 6வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பொதுக் குழு நன்றியும், வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தது.
நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரவிருப்பதால் அதிமுகவின் சட்டதிட்ட விதி 30 பிரிவு 2ன்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதை தற்காலிகமாக தளர்த்தி, கால அளவை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டணி குறித்து ஜெ. முடிவெடுக்கலாம்:
15வது மக்களவை பொது தேர்தலுக்கு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கச்சத்தீவு:
தமிழக மீனவர்களின் நலனை முன்னிட்டு கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
1974ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கவும், நெசவாளர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமைதி பூங்காவான தமிழகத்தை வன்முறை காடாக மாற்றிய முதல்வர் கருணாநிதியை கண்டித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அரும்பணியாற்றி அதிமுகவுக்கு மாபெரும் வெற்றி தேடித்தருவது என்றும் சூளுரைத்தும் தீர்மானம் நிறைவேறியது.
மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications