அவுட்சோர்சிங்.. பெரிய பாதிப்பில்லை-நாஸ்காம்
மும்பை: லேஹ்மன் பிரதர்ஸ் நிறுவன திவாலுக்குப் பின் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு இந்திய சாஃப்ட்வேர் சந்தையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பிபிஓக்கள் முழுமையாக அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகளைச் சார்ந்து இயங்குபவையே. இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு மற்றும் பெருமந்த நிலை காரணமாக இந்தியாவில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் பல ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. பல பிபிஓக்களுக்கு வேலை இல்லாத நிலையும் தோன்றியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நாஸ்காம் (இந்திய சாஃப்ட்வேர் வர்த்தகத்தின் தலைமை அமைப்பு), உலகமெங்கும் ஏற்பட்டுள் பொருளாதார பாதிப்பு இந்திய ஐடி துறையை பெருமளவு பாதித்திருப்பது உண்மைதான். மறுக்கவில்லை. மேலும் பிபிஓக்களுக்கு இது மிகவும் நெருக்கடியான காலம். ஆனால் இந்த நிலை தற்காலிகமானது என்றே தோன்றுகிறது.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த நிலை மேலும் தீவிரமடைந்தால், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் பேசி வருகிறோம்..., என நாஸ்காம் கூறியுள்ளது.
யாருக்கு பாதிப்பு?:
இந்த பெருமந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்கள் எவை என்ற விவரங்களும் இப்போது வெளி வரத் துவங்கியுள்ளன. நாட்டின் சாஃப்ட்வேர் வர்த்தகத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் இன்போஸிஸ் மற்றும் டாடா கன்சஸ்டன்ஸி நிறுவனங்களுக்கு இதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இது குறித்து அவை கருத்து கூற மறுத்து வருகின்றன.
தனிப்பட்ட எந்த நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்தும் கருத்துகூற நாங்கள் விரும்பவில்லை என இவ்விரு நிறுவனங்களும் கூறிவிட்டன.
ஆனால் விப்ரோ நிறுவனம் தனது இழப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளது. லேஹ்மன் பிரதர்ஸூடன் வர்த்தகம் குறித்து நாங்கள் பேசி வந்தது உண்மைதான். ஆனால் அந்த இழப்பு எவ்வளவு, பாதிப்பு என்ன போன்ற விபரங்களை வெளியில் விவாதிக்க முடியாது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சத்யம் நிறுவனமும் இதே போலத்தான் கூறியுள்ளது. லேஹ்மன் பிரதர்ஸூடன் அவர்கள் வணிக உறவு வைத்திருந்தாலும், அவர்கள் மூலம் வந்த வருவாய் குறைந்த அளவுதான் என்றும், இதனால் தங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும் கூறியுள்ளது.
லேஹ்மனும், மெர்ரில் லின்ஜ்சும் வீழ்ந்ததில் தங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்றும், அவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களும் இல்லை எனவும் மற்றொரு பெரிய நிறுவனமான எச்சிஎல் கூறியுள்ளது.
மேலும் பிபிஓ துறையில் கணிசமான வேலையிழப்புகள் தொடரும், சம்பள உயர்வும் இனி பெரிதாக இருக்காது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பிபிஓ நிறுவனங்கள் பெரும் வருவாயைக் குவித்தன. ஆனால் நிச்சயம் இந்த ஆண்டு இதில் பாதியளவுக்குக் கூட வருவாய் இருக்குமா தெரியாது என பீதியைக் கிளப்புகின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
ஏற்கெனவே சாஃப்ட்வேர் துறையில் நீடித்த 29 சதவிகித வளர்ச்சி இந்த ஆண்டு 22 சதவிகிதமாக குறைந்துள்ளது. இப்போது பெருளாதார மந்தம் வேறு சேர்ந்து கொண்டதால் சில காலத்துக்கு கஷ்டம் தான்.












Click it and Unblock the Notifications