வீரம் இல்லாத விவேகம்.. பயனில்லை: பாஜக
ராமநாதபுரம்: தமிழகத்தில் கையாலாகாத அரசு ஆட்சி நடத்தி வருகிறது என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முக்கிய மாநிலங்களை குறிவைத்து தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதியில் இருந்து பிரதமர் வரை உயர் பதவிகளில் இருப்பவர்கள் வார்த்தை பிரயோகங்களை அறிக்கைகளாக வெளியிடுகிறார்களே தவிர வெடிகுண்டு நிகழ்வுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது துரதிர்ஷ்டம்.
பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்டங்கள் தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவு கோழைத்தனமானது. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் ஓட்டு வங்கியை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்பதற்காக சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கியுள்ளனர்.
சத்திரியனாக இருப்பவன் அகிம்சையை பற்றி பேசக்கூடாது. தனது கடமையை கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும். வீரம் இல்லாத விவேகம் எந்த பலனையும் அளிக்காது என்பதை உயர் பதவியில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
தமிழகத்தில் 6 மாதங்கள் வரை மின்வெட்டு நீடிக்கும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இரண்டரை ஆண்டுகள் வரை மின் வெட்டு தொடரும் என்று அறிவித்துள்ளார்.
திமுகவின் ஆட்சிக் காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் என்பதால் அதை கணக்கிட்டு அவர் கூறியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. தமிழகத்தில் கையாலாகாத அரசு ஆட்சி செய்து வருவதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்களை சுட்டிக்காட்டி அவர்களைவிட நமது நிலை மோசமில்லை என்று கூறிவரும் முதல்வர் கருணாநிதி சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு சதவீத மின்வெட்டு கூட இருந்ததில்லை என்ற விளம்பர செய்தியை படித்திருப்பார் என நம்புகிறேன்.
அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடப்பதால் இதை சாதிக்க முடிந்துள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற நிலை எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்படும்.
இஸ்லாமியர்களில் நல்லவர்கள், அமைதியை விரும்புபவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஆனால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் அதற்கு தடையாக இருப்பதோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இஸ்லாமியர்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவு சிலரால் துண்டிக்கப்பட்டு கலவரத்துக்கான விதைகள் தூவப்பட்டுள்ளன. இதை முளையிலேயே கிள்ளி எறிய போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications