அணு ஒப்பந்தம்-பிரதமர் இன்று யு.எஸ் பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் 10 நாள் பயணமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இன்று புறப்படுகிறார்.
இந்தப் பயணத்தின்போது, முடிந்தால், அவர் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடும் என்று தெரிகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.
இந்த ஒப்பந்தம் இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒப்புதல் கிடைத்தால் தான் பிரதமரும் அமெரிக்க அதிபர் புஷ்சும் அதில் கையெழுத்திட முடியும்.
இதனால் ஒப்பந்தந்துக்கு விரைவில் ஒப்புதல் பெற புஷ் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளதால் இந்தப் பயணத்தின்போதே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு வாய்ப்புகள் குறைவே.
23ம் தேதி முதல் 27ம் தேதி அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் 26ம் தேதி ஐ.நாவின் 63 பொது சபைக் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சீன பிரதமர் வென்ஜியாபோ உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
28ம் தேதி பிரான்ஸ் புறப்படும் பிரதமர் 29ம் தேதி மார்ஷெல் நகரில் நடக்கும் இந்திய-ஐரோப்பிய யூனியன் கூட்டத்திலும், பின்னர் இந்திய-பிரான்ஸ் கூட்டுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அப்போது பிரான்சுடனும் தனியாக அணு ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பிரஞ்சு அதிபர் நிக்கோலசுடன் பேச்சு நடத்துகிறார்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 1ம் தேதி பிரதமர் இந்தியா திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications