நிதி நெருக்கடி-யு.எஸ். காங்கிரசில் பின்னுக்கு போன அணு ஒப்பந்தம்
வாஷிங்டன்: அமெரிக்காவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நிதிச் சந்தை நெருக்கடி குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் விரிவான விவாதம் நடத்தவுள்ளது. இதனால் இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் உடனடியாக ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே புஷ் பதவிக்காலத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாவது கேள்விக்குறியாகியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவின் மிகப் பெரிய டாபிக் ஆக இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தான் இருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிப்பது குறித்த விவாதம் சூடாக நடந்து வந்தது.
ஆனால் தற்போது நிலைமை அப்படியே மாறிப் போயுள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு, அந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகிறது. பல வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து இவற்றைக் காக்கவும், நிதி நிலை சீர்குலைவைத் தடுக்கவும் அமெரிக்க அரசு முழு வீச்சில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நிலைமையை சமாளிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதமும் நடைபெறவுள்ளது.
இதனால் இந்தியா மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே பிரதமர் மன்மோகன் சிங் தனது அமெரிக்க பயணத்தின்போது அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இல்ைல என்று கூறப்படுகிறது.
நாளை மறு நாள் புஷ்ஷை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் பிரதமர். அப்போது இருவரும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக குறைந்து போய் விட்டது.
புஷ் பதவிக்காலத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications