மின் பற்றாக்குறை: திரும்பத் திரும்ப பொய் பேசும் கருணாநிதி - ஜெ.
சென்னை: மின்சாரப் பற்றாக்குறை தொடர்பாக உண்மைகளை மறைத்து திரும்பத் திரும்ப பொய் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1991முதல் 1996வரையிலும், 2001முதல் 2006வரையிலும் நடைபெற்ற எனது ஆட்சி காலத்தில் 3430.75 மெகாவாட் அளவிற்கு புதிதாக மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள மொத்த மின் நிறுவுதிறனில் எனது ஆட்சி காலத்தில்மட்டும் 3ல் ஒரு பங்கு மின் நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது என்று பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
இதுமட்டுமல்லாமல், அனல் மின் நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்தது.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க,
1996-2001 திமுக ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியில் கவனம் செலுத்திய காரணத்தினால் தான் இடையில் வந்த ஆட்சிகள் மின்சார பிரச்சனையை சமாளிக்க முடிந்தது என்று மிக பெரிய பொய்யை முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.
அவரது முந்தைய ஆட்சி காலத்திலும் கடுமையான மின்சார பற்றாக்குறை நிலவியதை கருணாநிதி மறந்து விட்டாரா?அல்லது மறைக்க பார்க்கிறாரா? என்று தெரியவில்லை. இவருடைய 1996-2001 ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மின் நிறுவு திறன் 560.69 மெகாவாட் மட்டுமே.
திமுக ஆட்சியில் இவ்வளவு குறைவாக மின்சார பற்றாக்குறை நிலவியபோதும் 2001-06 வரையிலான எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துகொண்டேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியது.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் கடுமையான மின்சார பற்றாக்குறைக்கு காரணம் முறையான பராமரிப்பு இல்லாததால் எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் மாறிமாறி பழுதடைகின்றன. இதன் மூலம் மட்டும் 700 முதல் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி குறைகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் 2 மாதமாக இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிலக்கரியில் 25 விழுக்காடு அளவுக்கும், எரிவாயுவில் தினமும் 4 லட்சத்து 50 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கும் குறைத்துள்ளது.
இந்த உண்மைகளை தெரிவிக்காமல் மனம்போன போக்கில் கருணாநிதி முந்தைய அதிமுக அரசின் மீது பழிபோடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா