மது, புகை பிடிக்க தடை - மதுரை அருகே முன்னுதாரண கிராமம்!
மதுரை: அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை அமலுக்கு வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாகவே மதுரை அருகே ஒரு கிராமத்தில் புகை பிடிக்க, மது அருந்த முழுத் தடை அமலில் இருந்து வருகிறது. ஊர் மக்கள் அதைக் கட்டுப்பாட்டோடு சிறப்பாக கடைப்பிடித்து வருகின்றனர் என்பதுதான் இதில் விசேஷமானது.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ளது அ.புதுப்பட்டி கிராமம். சுமார் 5000க்கும் மேற்படடோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை, பான்பராக் போன்ற போதை தரும் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, கடைகளிலும் இவற்றை விற்கக் கூடாது. சாராயமும் அறவே கிடையாது. மதுக்கடைகள் கிடையவே கிடையாது. இந்த கட்டுப்பாடு பல வருடங்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் திமுக, அதிமுக ஆட்சியில் இந்த கிராமத்தில் மதுக்கடைகள் திறக்க அரசு முன் வந்தபோது அதை திறக்க கூடாது என்று பொது மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தி சாராயத்தை விரட்டியடித்தனர்.
ஊர்க்காரர்களுக்கு மட்டுமல்லாமல், ஊருக்கு வரும் பிற ஊர்க்காரர்களும் இந்த கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாக வேண்டும்.
எந்தவித சட்டமும், உருட்டலும், மிரட்டலும் இல்லாமல் கிராம மக்கள் இந்த கட்டுப்பாடுகளை மிகச் சிறப்பாகவும், முறையாகவும் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதால் அக்கம் பக்கத்து கிராம மக்கள் அ.புதுப்பட்டிக்காரர்களை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
இதேபோல மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் என்ற கிராமத்திலும் இதுபோன்ற புகை, மது தடை அமலில் உள்ளதாம்.
அரசே மதுக்கடையை திறந்து 'கெடுக்க' நினைத்தபோதும் அதற்கு வளைந்து கொடுக்காமல் 'இரும்பாக' நின்று காட்டிய அ.புதுப்பட்டிக்காரர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!