செக் போஸ்டில் ரெய்டு: டிபன் பாக்ஸ்களில் ரூ. 55,000 லஞ்சப் பணம்!
களியக்காவிளை: கன்னியாக்குமரி மாவட்டம் களியக்காவிளை போக்குவரத்து சோதனை சாவடியிலும், இன்ஸ்பெக்டர் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய ரெய்டில் ரூ.55,000 லஞ்ச பணம் சிக்கியது. சைஸ் வாரியான தூக்குவாளிகளில் இந்த லஞ்சப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லைக்கான சோதனை சாவடி மற்றும் வணிகவரி சோதனைச் சாவடிகள் உள்ளன. போக்குவரத்து சோதனை சாவடி மூலம் டூரிஸ்ட் பெர்மிட் போன்ற பணிகள் நடக்கின்றன. இதில் அரசு விதித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சுந்தர் ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜன்ராய், கண்ணன், போலீசார் நடராஜன், அசோக்குமார், நாகராஜன், சுதாகரன், குமரேசன் ஆகியோர் போக்குவரத்து சோதனை சாவடியில் திடீர் ரெய்டு நடத்தினர்.
அப்போது அங்கிருந்த 6 தூக்கு வாளிகளை திறந்து பார்த்தபோது கட்டுகட்டாக ரூ.17,560 லஞ்ச பணம் இருந்தது போலீஸாரை அதிர வைத்தது. அப்பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அந்த சோதனைச் சாவடியின் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள கணேஷ்சிங், அலுவல உதவியாளர் தமோதரன் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.
தொடர்ந்து கணேஷ்சிங் தங்கியிருந்த மார்த்தாண்டம் லாட்ஜ் அறையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 37,150 ரூபாய் லஞ்ச பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.55,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை
நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications