மகனின் உறுப்புகள் தானம்: டாக்டர் தம்பதிக்கு குவியும் பாராட்டு
காஞ்சிபுரம்: மகன் ஹிதேந்திரனின் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்து மனிதர்களுல் மாணிக்கமாக உயர்ந்திருக்கும் காஞ்சிபுரம் டாக்டர் அசோகன் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மத்திய அமைச்சர்கள் டாக்டர் அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சென்று அசோகன் தம்பதியைப் பாராட்டினர்.
திருக்கழுக்குன்றத்தைச் ேசர்ந்த டாக்டர் அசோகன் தம்பதியின் மகன் ஹிதேந்தின். 16 வயதான ஹிதேந்திரன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தான். இதையடுத்து அவனது இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அசோகன் தம்பதியினர் தானம் செய்தனர்.
ஹிதேந்திரனின் இதயம், அபிராமி என்கிற சிறுமிக்கு பொருத்தப்பட்டு அந்த சிறுமிக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
இதையடுத்து அபிராமியின் பெற்றோர் நேற்று ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அவனது படத்தைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் அசோகன் தம்பதியின் முன்பு அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுது அவர்களின் தானத்தால் தங்களது மகளுக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது என்று கூறி நன்றி தெரிவித்தனர்.
அபிராமியின் பெற்றோரும், ஹிதேந்திரனின் பெற்றோரும் பரஸ்பரம் ஆறுதல் கூறிக் கொண்டது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அமைச்சர்கள் சந்திப்பு
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அவனது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அசோகன் தம்பதிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அதேபோல மத்திய புள்ளியியல் துறைஇணை அமைச்சர் ஜி.கே.வாசனும் ஹிதேந்திரன் வீட்டுக்குச் சென்று அசோகன் தம்பதிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹிதேந்திரனும், அவனது உடல் உறுப்புகளை தானம் செய்து மனிதாபிமானத்தை நிலை நிறுத்திய அசோகன் தம்பதியினரும் காலம் காலமாக நினைவு கூறப்படுவார்கள்.
அசோகன் தம்பதியினரின் செயலை நான் வெகுவாக பாராட்டினேன் என்றார்.