அணு ஒப்பந்தம்: யு.எஸ். பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய - அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
முதலில் ஒப்பந்தம் குறித்து செனட் சபையில் விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரதிநிதிகள் சபையில் ஒப்பந்தம் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் விவாதம் தொடங்கியது.
இரு தரப்புக்கும் (ஆதரிப்போர், எதிர்ப்போர் - கட்சி பாகுபாடின்றி) தலா 20 நிமிடங்கள் வாதம் செய்ய அனுமதி தரப்பட்டது.
ஆதரிப்போர் தரப்பில் பேசிய ஜோ வில்சன், அமெரிக்க- இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும்.
அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதில்லை என்று இந்தியாவே முன்வந்து உறுதியளித்துள்ளது. மேலும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கண்காணிப்பும் இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை நாம் நிறைவேற்ற ஒப்புதல் தர வேண்டும் என்றார்.
எதிர்ப்பாளர்கள் தரப்பில் வாதிட்டோர், இந்தியாவுக்கு ஒப்புதல் அளித்தால் நாளை பாகிஸ்தானும் இதேபோன்ற ஒப்பந்தத்தை கோரும். பாகிஸ்தானும் நமது நட்பு நாடுதான். அப்போது நம்மால் மறுக்க முடியாது.
மேலும் இந்த ஒப்பந்தத்தால் தெற்காசியாவில் அணு ஆயுதப் போட்டி ஏற்பட வழி ஏற்படும் என்றனர்.
விவாதத்தின்போது உறுப்பினர்களில் 3ல் 2 பங்கு பேர் வரவில்லை. இதனால் வாக்கெடுப்புக்கு உரிய கோரம் இல்லை. இதன் காரணமாக நேற்று வாக்கெடுப்பு நடைபெறவில்லை. தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் ஒப்பந்தத்திற்கு பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் கிடைத்து விட்டது.
ஒப்பந்தத்தின் மீதான விவாதம் தொடர்பாக மொத்தம் 18 பேர் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தடையை தாண்டி விட்ட அணு சக்தி ஒப்பந்தம் அடுத்து செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. செனட் சபையில் நாளை ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications