கோவில் உரிமை பிரச்சனை-6 சமுதாய மக்கள் உண்ணாவிரதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட உரிமை பிரச்சனையால், 6 சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ளது காக்கிவாடன்பட்டியில் காளியம்மன் மற்றும் கண்ணன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வழிபாடு நடத்துவது தொடர்பாக 6 சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கும், இன்னொரு சமூகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கோவிலின் உரிமை குறி்த்த பிரச்சனையால் கோவில்கள் பூட்டப்பட்டன. இந்த கோவில்களில் வழிபாடு நடத்த உரிமை கோரி 6 சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு அருகே உள்ள காமாட்சியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி குடியேறினர்.
சமரசம் செய்ய வந்த தாசில்தார், அவர்களுக்காக காத்திருந்தார். அப்போது கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் அவர்கள் வராததால் தாசில்தார் சென்றுவிட்டார்.
இந்த பிரச்சனையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரு தரப்பையும் அழைத்துப் பேச வேண்டும் என்று போராட்டகாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை ஏற்கப்படாதாதல் 6 சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.