ஈழத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதம்: அதிமுக திடீர் புறக்கணிப்பு
இலங்கை தமிழர்கள் மீதான ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது, இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கபப்ட்டிருந்தது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே நடந்த போராட்டத்தில், காங்கிரஸ், திமுக நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைக்காதது குறித்து முதல்வர் கருணாநிதி அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று நடந்த உண்ணாவிரதத்தில் திடீரென அதிமுக கலந்து கொள்ளவில்லை. அதிமுக சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக திடீரென உண்ணாவிரதத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டது.
தேமுதிக மயம்
உண்ணாவிரத பந்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் தா. பாண்டியன், இணை செயலாளர் சி. மகேந்திரன், தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சரும், இலங்கை தமிழர் பிரச்சனையை ஐ.நா. சபையில் ஒலிக்க செய்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டபிள்யூ ஆர்.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தேமுதிக தொண்டர்கள் தங்கள் கொடிகளுடன் பெருமளவில் கலந்து கொண்டார்கள். தேமுதிக இளைஞரணியினர் மஞ்சள் சீருடையில் வந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் தேமுதிகவின் கொடிகள் காட்சி அளித்தது.
அதிமுக திடீர் புறக்கணிப்பு:
உண்ணாவிரதம் துவங்கிய போது சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னணியினர் பங்கேற்றனர். முத்துசாமி இப்போது வருவார், சற்று நேரத்தில் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென்று அதிமுக முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்து நழுவ ஆரம்பித்தார்கள்.
இதேபோல மற்ற அனைத்து ஊர்களிலும் அதிமுகவினர் உண்ணாவிரதத்திற்கு வரவில்லை.
உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தா.பாண்டியனுக்கு கடிதம் எழுதியிருந்தார். முத்துச்சாமி வருவார் எனவும் கூறியிருந்தார். ஆனால் திடீரென அதிமுக பங்கேற்காமல் புறக்கணித்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லேட்டாக வந்த வைகோ:
அதேபோல மதிமுகவினரும் உண்ணாவிரதத்தில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவில்லை. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உண்ணாவிரதம் ஆரம்பித்து நெடு நேரம் கழித்து வந்து கலந்து கொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு பெருமளவிலான தேமுதிகவினர் வந்திருந்ததால் கடுப்பான அதிமுக புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், டாக்டர் கிருஷ்ணசாமி, உலகத் தமிழர் பேரவை தலைவர் இரா. ஜனார்த்தனம், திண்டிவனம் ராமமூர்த்தி, ஜெகவீரபாண்டியன், ஷேக்தாவூத், இசக்கிமுத்து, வேட்டவலம் மணிகண்டன், சுப. இளவரசன், துரையரசன், விஜய டி. ராஜேந்தர், இயக்குனர் சீமான், கவிஞர் முத்துலிங்கம், ஓவியர் புகழேந்தி, டாக்டர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
சென்னை அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், தாலுகா தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.