மகளை எழுத்தராக்க முயன்ற திமுக பஞ். தலைவரின் முயற்சி தோல்வி
சென்னை: சென்னை அருகே திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தனது மகளை ஊராட்சி அலுவலக எழுத்தராக நியமிக்க முயன்றார். ஆனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.
சென்னை, மேடவாக்கம் அருகே உள்ளது ஒட்டியம்பாக்கம் ஊராட்சி. இதன் தலைவராக இருப்பவர் சடையப்பன். இவர் திமுகவைச் சேர்ந்தவராவார். இவரது மகள் சுதா.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில், எழுத்தர் பணி காலியாக உள்ளது. இதில் சேர 4 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் பட்டதாரியான தனது மகள் சுதாவை அப்பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தார் சடையப்பன்.
இதையடுத்து நேற்று மன்றக் கூட்டத்தை அவர் கூட்டினார். அதில் சுதாவை எழுத்தராக நியமிக்க தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த ராஜாராமன் மற்றும் கவுன்சிலர்கள் ஏழுமலை, சுந்தரராஜன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்னர்.
இது அரசு விதிமுறைகளை மீறும் செயல், ஏற்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனாலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தார் சடையப்பன். இதையடுத்து 3 பேரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சையை வளர்க்க விரும்பாமல் மகளை எழுத்தர் பதவியில் நியமிக்கும் தீர்மானத்தை கைவிட்டு விட்டு கிளம்பிச் சென்றார் சடையப்பன்.












Click it and Unblock the Notifications