பிரபாகரன் தலைமை இடத்தை ராணுவத்தால் அழிக்க முடியாது: புலிகள்
கொழும்பு: பிரபாகரன் தங்கியுள்ள தலைமையிடத்தை இலங்கை ராணுவத்தால் நெருங்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே பயங்கர போர் நடந்து வருகிறது. புலிகளின் தலைமை இடமான கிளிநொச்சியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இன்னும் 2 கிலோமீட்டர் தூரத்தில் நகர் உள்ளது. விரைவில் கிளிநொச்சி வீழும் என்று ராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபாகரன் இனி ஒன்றும் செய்ய முடியாது, தப்பிச் செல்லவே அவர் இனி முயற்சிப்பார் என்றும் அவர் கொக்கரித்துள்ளார்.
மேலும், பிரபாகரனின் தலைமை இடத்தை குண்டு வீசி தாக்கி அழிக்கவும், புலிகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை தாக்கி அழிக்க வான் தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியும் உள்ளது.
ஆனால் ராணுவத்தின் ரகசிய திட்டங்களையும், தாக்குதலையும் முறியடிப்பதில் பிராபகரன் வல்லவர். அவரது தலைமை இடத்தை ராணுவத்தால் அழிக்க முடியாது என்று புலிகள் தரப்பு கூறுகிறது. இதுதொடர்பாக கொழும்பு இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில்,
புலிகளின் அரசியல் தலைமையகத்தை தாக்கும்படி விமானப்படைக்கு கடந்த வாரம் அரசு உத்தரவிட்டது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த அலுவலகத்தில் யாரும் இல்லை. புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் கூட அங்கு வருவது குறைவு. அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி இயக்கத்தின் முன்னணி தலைவர்களை தலைமை அறிவுறுத்தியுள்ளது.
வான் தாக்குதலில் புலிகளின் கட்டளை மையங்கள் செயலிழந்துவிட்டதாக கருத முடியாது. புலிகள் தங்கள் கட்டளை மையங்களை ஏற்கனவே இடம் மாற்றிவிட்டதாக வன்னியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் உள் கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே அவர்களின் போர் தந்திரங்களையும் யுக்திகளையும் கண்டுபிடிக்க முடியாது. முன்பு நடந்த வான் தூக்குதல்களில் இருந்தே புலிகள் தங்கள் படை அணிகளை விலக்கியே வைத்திருந்தனர்.
இதற்கிடையே கிளிநொச்சி மீதாத உச்சகட்ட தாக்குதலுக்கு ராணுவத்தின் 57வது படைப்பிரிவு தயாராகி வருவதாகவும், வீரர்கள் கிளிநொச்சியை நோக்கி நகர தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை முறியடிப்பதற்காக புலிகளும் தயாராகி வருகின்றனர். கிளிநொச்சியை சுற்றி மண் அணைகளை புலிகள் அமைத்துள்ளனர். எனவே கிளிநொச்சியில் ராணுவம் கடுமையான எதிர் தாக்குதல்களை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று அந்த செய்தி கூறுகிறது.