ஈழத் தமிழர்களைக் காக்க பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க வேண்டும்: ராமதாஸ்
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தமிழர்கள் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக உயிருக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக் கொண்டுள்ளனர்.
ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான படுகொலையை ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இந்திய அரசு வாய் திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
இலங்கை தமிழர்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்தக் கடமையை செய்யவில்ைல என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையோடு மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.
பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகளை அனுப்பி வையுங்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். அது வரவேற்கத்தக்க கோரிக்கைதான். ஆனால் இவை மட்டும் போதாது, சட்டபபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையில், இப்போது போர் நடவடிக்கைகளும், போர்ப்படையினரின் தாக்குதல்களும் தீவிரமாகி இருப்பதும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சட்டப்பேரவையும், தமிழக மக்களும் விரும்பிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில் எங்கோ ஒரு மூலையில் பொதுக்கூட்டம் நடத்தி, நிலைமையை விளக்குவதாலும், தந்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாலும் நாம் விரும்புகின்ற பயன் ஏற்படப் போவதில்லை.
முதல்வரும், அவரது தலைமையிலான அரசும் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த நல்ல சூழ்நிலையை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்களப் போர்ப்படையினருக்கு எந்தவித உதவியும் வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
தந்தி அனுப்புவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று இந்த அறிக்கையில் கூறியிருந்த ராமதாஸ், இன்னொரு அறிக்கையில், தந்தி அனுப்புங்கள் என்று பாமகவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கில் தந்திகள் குவிய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை வரவேற்கிறேன். இந்த வேண்டுகோளை ஏற்று இன்றே (நேற்றே) நான் பிரதமருக்கு தந்தி அனுப்பி வைத்திருக்கிறேன். என்னைப் பின்பற்றி பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.