ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல், ஈழத் தமிழர்கள் மீது நடந்து வருவதைப் போல தொடர் கதையாகி விட்டது. தமிழர்கள் என்று யாரைப் பார்த்தாலும் இனி இலங்கை கடற்படை சுட்டுத் தள்ளும் நிலை உருவாகி வருகிறது.
சமீபத்தில், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மதுரை மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அடாவடித் தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது.
நேற்று முன்தினம் 504 படகுகளில் மீன்வர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.
தமிழக மீனவர்களை துப்பாக்கிகளை காட்டி செல்லுமாறு எச்சரித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் வலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக கிளம்பினர். அப்போது சில கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை மறித்து வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் மீன்களைப் பறிமுதல் செய்தனர். மீன்பிடி சாதனங்களையும் எடுத்துக் கொண்டு தமிழக மீனவர்களை விரட்டி விட்டனர்.
இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.