இலங்கை அரசே தீர்வு திட்டத்தை அறிவிக்கட்டும்: தா.பாண்டியன்
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் நம்முடைய ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே இந்த முறை இலங்கை அரசு தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அதை ஏற்பதா இல்லையா என்பதை பிறகு பரிசீலித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த நம் தரப்பில் சொல்லப்பட்ட எந்த கருத்தையும் இலங்கை ஏற்கவில்லை.
இதற்கு தீர்வு காண பிரதமர்கள் நேரு, இந்திரா, சாஸ்திரி, ராஜீவ் காலங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, இந்த முறை இந்த பிரச்சனைக்கு இலங்கை அரசுதான் தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அதை ஏற்பதா இல்லையா என்பதை பிறகு பரிசீலித்து முடிவு செய்து கொள்ளலாம்.
முதலில் அங்கு நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். இதில் முதல்வர் கருணாநிதி எடுத்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.
மத்திய அரசில் திமுக பங்கேற்பதால் அதற்காகவாவது முதல்வரின் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்த்தாக வேண்டும். ஜெயலலிதாவின் அறிக்கையும் நமக்கு பக்க பலமாகவே உள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இலங்கை தமிழர் பிரச்சனையில் பிரதமர் தலையிட கோரி தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.