மாணவன் மீது தாக்குதல்: தனியார் பள்ளி முதல்வர் மீது புகார்!
தூத்துக்குடி: தன் பள்ளியில் படித்த மாணவரைத் தாக்கியதாக அப்பள்ளியின் முதல்வர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ராஜீவ் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் முருகபூபதி. இவர் பேப்பர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் முகேஷ் கோகுல். தூத்துக்குடி மில்லர் புரத்தில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் பள்ளியில் தினமும் காலையில் பிரார்த்தனை நேரம் முடிந்ததும் மாணவர் ஒருவர் செய்தி தாளைப் படித்து அதிலுள்ள முக்கியச் செய்திகளைச் சொல்வது வழக்கம்.
நேற்று காலை மாணவர் முகேஷ் கோகுல் செய்தி தாளை படித்து சரியாக சொல்லவில்லையாம். அதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி முதல்வர் பிரைட் மாணவரை அடித்து உதைத்தாகத் தெரிகிறது.
அன்று மாலை வீடு திரும்பிய முகேஷ் கோகுல், இரவு வேலை முடிந்து தாய் வீட்டிற்கு வந்தபின் பள்ளியில் முதல்வர் தன்னை தாக்கி அவமானப்படுத்தியது பற்றி கூறி அழுதுள்ளார்.
உடல் முழுவதும் ஊமைக் காயங்கள் இருந்ததால் முகேஷ் கோகுல் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications