குடத்தால் அடித்து மெக்கானிக் கொலை: கள்ளக்காதலி பிடிபட்டார்
தூத்துக்குடி: குடத்தால் அடித்து மெக்கானிக்கை கொலை செய்த கள்ளக்காதலியை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்தவர் கண்ணன். இவர் நாசரேத்தில் குடியிருந்து வருகிறார். சாத்தான்குளத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி மகராசி. இவர்களுக்கு சத்ய ரூபா, முத்துலெட்சுமி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கண்ணனுக்கும், நாசரேத் இம்மாணுவேல் தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதை மகராசி கண்டித்தார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மகராசி குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நாசரேத்தில் கண்ணனுக்கும் சாந்திக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சாந்தி கண்ணனை குடத்தால் சராமரியாக அடித்தார்.
இதில் படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணனின் சகோதரர் ஆறுமுகபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீஸார் சாந்தியை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.