ரஜினி அரசியல்: அவரும்தான் வரட்டுமே!
திருவண்ணாமலை: ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவர் விருப்பம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரும்தான் வரட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு பொதுப் பிரச்சனை. இதில் அரசியல் ஆதாயம் பார்க்கக் கூடாது. அதனால்தான் இந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம். மனித நேயத்துடன் முதல்வர் கருணாநிதி கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, மதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். கூட்டணி குறித்து தேர்தலின்போது முடிவு செய்து அறிவிக்கப்படும்.
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அவரும்தான் களத்துக்கு வரட்டுமே!
ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான புகார்களுக்கு அமைச்சர் ராஜா பதிலளிக்க வேண்டும். தவறினால் அவர் மீது பிரதமர் மன்மோகன்சிங் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த முடிவு சரியானதே.
எங்கள் கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். மக்களை சந்தி்த்து அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிவேன்.
தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்த மின்வெட்டால் வரும் தேர்தலில் திமுக தோல்வியை சந்திக்கும். தமிழக அரசு முதலில் மக்களுக்கு வழங்கும் இலவசத்தை நிறுத்த வேண்டும். இலவசமாக டிவியை வழங்கிவிட்டு மின்வெட்டு செய்தால் அவர்கள் எப்படி டிவி பார்ப்பார்கள்.