கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்போப் வேண்டுகோள்!
வாடிகன் சிட்டி: ஒரிஸா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் உடனே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் சமாதானமாக வாழப் பழக வேண்டும் என போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சகோதரி அல்போன்ஸாவுக்கு புனிதர் வழங்கிய பின்னர் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணாண்டஸ் தலைமையில் சென்ற இந்தியக் குழுவினரைச் சந்தித்த போப் ஆண்டவர் அவர்களிடம் தனது கவலையைத் தெரிவித்தார்.
முன்னதாக புனிதர் பட்டம் வழங்கும் விழாவிலும் இதுகுறித்துப் பேசினார். அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் மிகவும் கஷ்டமான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரிஸா, கர்நாடகா போன்ற பகுதிகளில் நடக்கும் தாக்குதல்கள் மனவேதனை அளிக்கின்றன.
அவர்கள் அனைவரும், கடினமான தருணத்தில் இருந்து மீள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. வன்முறையில் ஈடுபடும் அனைவரும் தங்களுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து அன்பு என்னும் நாகரீக வாழ்க்கையை வாழப் பழக வேண்டும்.
காங்கோ போன்ற சில நாடுகளிலும் கிறிஸ்தவ மக்களுக்கு கடுமையான சவால்கள், நெருக்கடிகள் உள்ளன. ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், அந்த நாட்டு அரசுகள் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றார் போப்.












Click it and Unblock the Notifications