ராமர் பாலம் வழிபாட்டுத்தலம் தான்: ராம.கோபாலன்
சென்னை: ராமர் பாலம் வழிபாட்டுத் தலம் தான். அதற்கான எல்லா ஆதாரங்களையும் நான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமர் பாலம் வழிபாட்டுத் தலம் அல்ல என்று ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் 100 பக்க மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ராமர் பாலம் வழிபாட்டுத் தலம் தான் என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் நானும் எனது மனுவில் தாக்கல் செய்து இருக்கிறேன்.
ராமர் பால வழக்கில் நானும் ஒரு மனுதாரர், மனுதாரர்களுக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு மனு வைத்தாக்கல் செய்திருப்பது நாகரீகமான செயல் அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஒரு இடம் வழிபாட்டுத் தலமா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது பக்தர்கள் தான். அரசு இந்த உரிமையில் தலையிட அனுமதிக்க மாட்டடோம்.
இந்துக்களுடைய நம்பிக்கையில் அரசின் குறுக்கீடுகளையும், தகர்க்க முயற்சிப்பதையும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
தனுஷ்கோடிக்கு செல்வதற்கு வசதிகளே இல்லாத நிலையில் கூட தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். ராமரே இல்லை என்று அவசர அவசரமாக ஒரு மனுவை தாக்கல் செய்து அதை திரும்பப்பெற்று அவமானப்பட்டது அரசுக்கு மறந்து விட்டது போலும்.
காங்கிரஸ் கட்சியின் இந்த இந்து விரோத நடவடிக்கைக்காக இவர்களை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள். சட்ட வல்லுனர்களின் துணை கொண்டு அரசின் வரம்பு மீறிய செயலை முறியடிப்போம்.
நேற்றிரவு ராமநாதபுரத்தில் நாகராஜன் என்ற பாஜக கவுன்சிலர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் இந்தக் கொடிய செயலைச் செய்திருப்பார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.
காவல்துறை உடனடியாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ராமநாதபுரத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. மாநில அரசு உடனடியாக இதைத்தடுத்த நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.