சோமாலியா கடல் கொள்ளையர்கள்-சமாளிக்க இந்திய போர் கப்பல்
டெல்லி: சோமாலியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு போர்க் கப்பலை அனுப்பவுள்ளது.
சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான சரக்கு, பயணிகள் கப்பல்களை அவர்கள் கடத்தியுள்ளனர்.
பல்வேறு நாடுகளும் பணம் தந்தே கப்பல்களையும் பயணிகளையும் ஊழியர்களையும் மீட்டுள்ளன.
இந் நிலையில் ஹாங்காங்கின் ஸ்டோட் வலோர் என்ற கெமிக்கல் டாங்கர் கப்பல் கடந்த மாதம் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலின் கேப்டன் பிரபாத் கோயல் உள்ளிட்ட இந்திய குழுவினரும் கொள்ளையர்களின் பிடியில் உள்ளனர்.
தனது கணவரையும் இந்திய கப்பல் ஊழியர்களையும் மீட்டுத் தரும்படி கேப்டன் பிரபாத் கோயலின் மனைவி சீமா கோயல் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து சோமாலியாவின் ஏடன் வளைகுடா பகுதிக்கு போர் கப்பல் அனுப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த போர் கப்பலில் ஹெலிகாப்டர், கமாண்டோ படையினர் இருப்பர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்திய கப்பலில் இருந்த 3 இந்தியர்களை கடல் கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.