மழை பெய்தாலும் நாளை மாநாடு-விஜயகாந்த்
சென்னை: தொடர்ந்து மழை பெய்தாலும் சென்னையில் நாளை (சனிக்கிழமை) தேமுதிக இளைஞரணி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் 18ம் தேதி நடக்கும் இளைஞர் அணி மாநாடு புதியதோர் சமுதாயம் காண தமிழ்நாட்டில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும்.
நான் தெரிவித்தபடி மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனினும் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை அனுமதி தர மறுக்கிறது. வாகன உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய முன் பணத்தை ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் திரும்ப தருகின்றனர் என்று கேள்விப்படுகிறேன்.
வண்ண விளக்குகள் அமைத்தால் அவற்றிற்கான மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். நம்முடைய விளம்பர போர்டுகள் சேதப்படுத்தப்படுகின்றன.
போலீஸ் துறை மூலமும் தொந்தரவு தருவார்கள். இத்தகைய தடைகளை நீங்கள் சந்தித்தாலும் அவற்றை எல்லாம் மீறி மாநாட்டிற்கு வெள்ளம் போல் வந்து சேருவீர்கள் என்பது மாற்றாருக்கும் தெரியும்.
செயற்கை தடைகள் ஒரு புறமிருக்க, வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே வந்து மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்துமோ என்று நல்ல உள்ளம் படைத்த நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர்.
ஆனால், எந்தத் தடையையும் சந்தித்து வெற்றி கொள்ளும் ஆற்றல் நம் தொண்டர்களுக்கு உண்டு. குறிப்பாக புதுக்கோட்டையில் பெய்யாத மழையா?. கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெளியிலும் கூடி நிற்கும் ஆற்றல் உள்ளவர்கள் நீங்கள்.
ஆகவே சென்னையில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு, மழை பெய்வதால் மட்டுமல்ல எக்காரணத்தைக் கொண்டும் தள்ளி வைக்கப்பட மாட்டாது. யாரேனும் அத்தகைய வதந்திகளை பரப்பினால் அதை நம்பாமல் மாநாட்டிற்கு வருக, வருக என அழைக்கிறேன்.
நம்முடைய மாநாடுகளின் சாதனைகளை கடந்த காலத்தில் நாமே தான் முறியடித்திருக்கிறோமே தவிர, வேறு எந்த அரசியல் இயக்கமும் அல்ல. அதுபோல, இந்த மாநாடு இதற்கு முந்தைய எல்லா மாநாடுகளையும் முறியடித்து புதிய சரித்திரம் படைக்க வேண்டும். உங்கள் அனைவரையும் காண நான் ஆவலோடு உள்ளேன்.
ஒன்று கூடுவோம், வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.