ராஜபக்சேவின் ஊதுகுழல் ஜெ.-நெடுமாறன் தாக்கு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளராகவும் உள்ள நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர்கள் மீது குண்டுமழை பொழிந்து இலங்கை ராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதை திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்து குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
தங்கள் மக்களையும், தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியை கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட்டு, அங்குள்ள ராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்த போரை நிறுத்தும்படி கூற நமக்க அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.
தமிழர்களுக்கு எதிரான இனவெறி அழிப்பை நடத்தி கொண்டிருக்கும் ராஜபக்சேவின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார்.
இரண்டு முறை முதல்வராக இருந்தவர். அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலையை பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ் பகைவர்களின் கைபொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தமிழ் உணர்வு இல்லாத விஜயகாந்த்- டி.ஆர் தாக்கு
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய லட்சிய திமுக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர் நிருபர்களிடம் பேசுகையில்,
அனைத்து கட்சி கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக முதல்வரை பாராட்டுகிறேன். மக்களின் கண்ணோட்டத்தில் அதிமுக, மதிமுக ஆகியவை திமுகவிற்கு எதிரான கட்சிகள், பாஜக காங்கிரசுக்கு எதிரான கட்சி என்பதால் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் உதிரிக் கட்சியாக (தேமுதிக?) இருப்பவர்கள், அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட விரும்பாத சிலரின் ஓட்டுகளை பெற்று வரும் கட்சி கூட இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன்?
கர்நாடகத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் என்றால் அங்கு எந்த கட்சியாவது புறக்கணிக்குமா? அந்த கூட்டத்திற்கு எதிராக பேச முடியுமா? காரணம் கர்நாடகாவில் இருப்பது இன ஒற்றுமை. ஆனால் இங்கு இல்லை என்பதே உண்மை.
அடுத்த மொழி பேசுகின்றவர்கள் இங்கே ஆட்டம் போடவும் முடியும், ஆள நினைக்கவும் முடியும் என்றால் இங்கே தமிழன் ஏமாந்து கொண்டே இருப்பான் என அவர்கள் நம்புகிறார்கள்.
அனைத்து கட்சி கூட்டத்தை மட்டுமா புறக்கணித்தார். இலங்கையிலிருந்து வந்த தமிழ் எம்.பிக்களை சந்திப்பதையும் சாக்குபோக்கு சொல்லி புறக்கணித்தார். காரணம் அவருக்கு தமிழ் உணர்வு இல்லை. இதனை தமிழர்கள் இனம் காணவில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழினம் இங்கு இருக்காது.
திரை உலகம் பல்வேறு மொழி பேசுபவர்களை கொண்டது. தமிழ்நாட்டுக்கு வந்து நடியுங்கள், சம்பாதியுங்கள். ஆனால் தமிழ்நாட்டையே ஆள வேண்டும் என்று கூறுவதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்.
இலங்கை பிரச்சினையில் பிரதமர் கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது. காங்கிரஸ் நிலைப்பாடு வலுவாக இருக்க வேண்டும். மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications