டெல்லி மெட்ரோ ரயில்பாலம் இடிந்து 2 பேர் பலி
டெல்லியில் இந்திர பிரஸ்தாவையும் நொய்டாவையும் இணைக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. கிழக்கு டெல்லியில் ஷாகர்பூரில் மேம்பாலம் கட்டுப்பணிகள் கட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கட்டப்பட்டு வரும் அந்த பாலத்தின் கீழ் வாகனங்கள் பார்க் செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த பாலம் திடீரென்று இடிந்து பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது விழுந்தது.
இந்த இடிபாடில் மாநகர பஸ் நொறுங்கியது. இதில் இரண்டு பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் கட்டட தொழிலாளர்கள் பலரும் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உடனடியாக போக்குவரத்து நிறத்தப்பட்டு வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாகர்பூர் பகுதி டெல்லியின் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்று. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பாலத்தில் கான்கிரீட் அமைப்பதற்காக இரும்பு கம்பிகளை ராட்சத கிரேன் மூலம் ஏற்றிக் கொண்டிருந்தபோது பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மெகா சைஸ் இரும்பு தூண்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து பாலமும் இடிநது விழுந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக் குறித்து ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளது.
இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். இந்நிலையில் நடந்துள்ள இந்த விபத்து டெல்லியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.