எங்களைப் பார்த்து கதிகலங்கும் கட்சிகள்: பிரேமலதா
சென்னை: தேமுதிக வளர்ச்சியைப் பார்த்த மற்ற கட்சிகள் கதிகலங்கி நிற்கின்றன என்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.
தேமுதிக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டில் பிரேமலதா பேசியதாவது:
தமிழ்நாட்டில் எந்த கட்சியும் செய்யாத செயலாக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் அணியினர் ஒன்று சேர்ந்து இந்த மாநாட்டை நடத்தி காட்டியுள்ளீர்கள்.
நாம் எத்தனையோ முறை எத்தனையோ விழாக்கள் நடத்தியுள்ளோம். இப்போது தலைநகரில் இஞைரணி மாநாட்டை நடத்தி சரித்திரம் படைத்துள்ளோம்.
மெரினா கடற்கரை பெரிதா அல்லது இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளம் பெரிதா என்ற வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த வெற்றி தொண்டர்களுடைய வெற்றி.
லஞ்ச லாவண்யத்தில் தமிழகம் உழன்று கொண்டிருக்கிறது.
இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இன்று ராஜபக்சேவால் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் துணை நிற்பவர் விஜயகாந்த். இந்தப் பிரச்சனைக்காக இன்று யார் யாரோ குரல் கொடுக்கின்றனர். இலங்கைக்கு நிதி உதவி செய்ததோடு, இலங்கைப் பிரச்சனை தீரும் வரை பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்தவர் விஜயகாந்த்.
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்போம். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் டிவி, இரண்டு ஏக்கர் நிலம் போன்றவை எல்லாம் ஏமாற்று திட்டம்; ஏமாந்துவிடாதீர்கள்.
இது போன்ற திட்டங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதுபோதும். மக்களை முட்டாளாக்காதீர்கள்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வந்த அறிவொளி திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். பயங்கரவாதத்தை ஒடுக்க மக்கள் பங்கேற்புடன் என்.சி.சி. போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்துவோம்.
நம் கட்சியில் எத்தனையோ அணி இருக்கிறது புதிதாக தொழில் முனைவோர் அணி என்று உருவாக்கப்பட உள்ளது. அதன் மூலம் கிராமப்புறத்தினர் சுயதொழில் செய்ய வழிவகை செய்யப்படும். எந்த கட்சிக்கும இல்லாத பெருமை தேமுதிகவிற்கு உண்டு. நமது கட்சியைப் பார்த்து பல கட்சிகள் இளைஞர், இளம்பெண் பாசறைகளை அமைத்து வருகின்றன.
எங்கள் வளர்ச்சியைப் பார்த்து மற்ற கட்சிகள் கதிகலங்குகின்றன. இந்த கூட்டத்தை வைத்து பொற்கால ஆட்சியை அமைப்போம், என்றார்.












Click it and Unblock the Notifications