கும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவு மண்டபம்-ஸ்டாலின் திறக்கிறார்
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23ம் தேதி திறந்து வைக்கிறார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் 23, 24 ஆகிய தேதிகளில் 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
23-ந் தேதி காலை 9 மணிக்கு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 பள்ளிக் குழந்தைகளின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம் மற்றும் பூங்காவை திறந்து வைக்கிறார்.
10.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், பேரூராட்சி துறை மற்றும் சுனாமி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.+
மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மா.மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார்.
24-ந் தேதி காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும், மாலை 4 மணிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கி பேசுகிறார்.