டிவி கேட்டு பஞ். அலுவலகத்திற்கு பூட்டு
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் வருசநாடு அருகே இலவச கலர் டிவி கேட்டு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு பொது மக்கள் பூட்டு போட்டனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ளது மந்தசுனை கிராமம்.
இந்த கிராமத்து பஞ்சாயத்து மூலம் தமிழக அரசின் இலவச கலர் டிவியை பெற்று வழங்குவதாக பொது மக்களிடம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை இலவச கலர் டிவி வழங்கவில்லை. இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மீனாட்சிக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மக்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை இல்லை.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுக்கையிட்டு பூட்டு போட்டு பூட்டினர்.
தகவல் அறிந்த பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி அதிர்ச்சி அடைந்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.