ராஜ் ஆதரவாளர்களால் தொழிலதிபர் அடித்து கொலை
மும்பை: மும்பையில் ஒரு வட இந்திய தொழிலதிபர் ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
வட மாநிலத்தவர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். நேற்று முன்தினம் அவரது ஆதரவாளர்கள் 3 வட இந்தியர்களாக் கொன்றனர்.
இந் நிலையில் நேற்று மும்பையின் புறநகரான பந்துப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான லால்ஜி ராம்சுந்தர் யாதவ் என்பவரின் கடை மீது நவநிர்மாண் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தடுத்த அவரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்தது. 50 வயதான அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார்.
காவல் நிலையங்களில் அலையும் ராஜ்:
இதற்கிடையே வட மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது தொடர்பாக மும்பையின் பல்வேறு காவல் நிலையங்களிலும் பதி்வு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக இன்று காலை முதல் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்றவண்ணம் உள்ளார் ராஜ் தாக்கரே.
ஏற்கனவே இரு வேறு காவல் நிலையங்களில் பதிவான வழக்குகள் தொடர்பாக கைதாகி, ஒரு நாள் இரவை லாக்-அப்பில் கழித்த பின் ஜாமீனும் பெற்றுவிட்டார் ராஜ்.
ஆனால், ஒரு வாரத்துக்கு தினமும் கேர்வாடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை அவர் காவல் நிலையம் வந்து கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து விசாரணைக்காக கல்யாண் ரயில்வே காவல் நிலையம் சென்றார்.
இதைத் தொடர்ந்து விக்ரோலி நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். அங்கு பதி்ல் மனு தாக்கல் செய்தார்.
அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 60 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.