தமிழர் படுகொலை: 800 அகதிகள் உண்ணாவிரதம்
நெல்லை: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தாழையூத்தில் நேற்று 800 அகதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். போரில் இறந்த அப்பாவி மக்களுக்காக குத்துவிளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் பாளை பெருமாள்புரம், தாழையூத்து நாராணம்மாள்புரம், கோபாலசமுத்திரம், தென்காசி, வள்ளியூர், சமூகரெங்கபுரம், அம்பை, செட்டிமேடு, மற்றும் சங்கரன்கோவிலில் இரண்டு என்று மொத்தம் 8 அகதிகள் முகாம்கள் உள்ளன.
இங்கு 6,000க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். இதில் தாழையூத்து அருகே உள்ள நாராணம்மாள்புரத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 800 அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன், சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டித்தும், தமிழக அரசு, மத்திய அரசு இதில் தலையிட்டு காப்பாற்ற கோரியும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
அகதிகள் முகாம் நுழைவு வாசலில் பந்தல் அமைத்து முகாம் தலைவர் கனகலிங்கம், உப தலைவர் தியாகராஜன், முன்னாள் தலைவர் ராமலிங்கம், ஆகியோர் தலைமையில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அப்போது பெண்கள் குழந்தைகள் குத்து விளக்கேற்றி இலங்கை போரில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.