மேகலாயா: சர்ச்சையை ஏற்படுத்திய பாக். பஜார்
ஷில்லாங்: மேகலாயாவில் பாகிஸ்தான் பஜார் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பலசரக்கு மற்றும் ஆடை விற்பனை சந்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயாவின் ஜெய்ந்தியா மலை மாவட்டம், ஜோவாய் என்ற இடத்தில் இந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிமென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சந்தை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காசி மாணவர் சங்கம் என்ற அமைப்பு, பாகிஸ்தான் பெயரில் சந்தை அமைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஏன் இந்த பஜாருக்கு பாகிஸ்தானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்தனர்.
மேலும், இன்னும் 2 நாட்களுக்குள் பாகிஸ்தான் பஜார் என்ற பெயரை மாற்றுமாறும் சிமென்ட் ஆலை நிர்வாகத்தினரை அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. எம்.கே.சிங் கூறுகையில், இப்படி ஒரு மார்க்கெட் அமைந்திருப்பது குறித்து எங்களுக்குத் தகவல் இல்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.