எனது நிலையில் மாற்றம் இல்லை - உறுதியாக இருக்கிறேன்: வைகோ
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் உறுதியாக இருக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி வைகோ இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று வைகோவை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றப்பட்டார். அப்போது திரண்டிருந்த செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினையிலிருந்து தமிழர்களைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடுவேன் என்று நான் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை ராணுவத்திற்கு ரேடார்கள், ஆயுதங்களை வழங்கி, இலங்கைத் தமிழர்களைக் கொல்லும் போக்குக்கு பிரதமர் மன்மோகன் சிங் துணை போகிறார் என்று நான் கூறியதையும் இப்போது மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.
இலங்கை படைகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து, உளவுத் தகவல்களைக் கொடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்து வருகிறது மன்மோகன் சிங் அரசு என்றார் வைகோ.
வைகோ, கண்ணப்பனுக்கு முதல் வகுப்பு:
புழல் சிறையில் வைகோவுக்கு விஐபிக்களுக்கான முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மெத்தை கட்டில், அமர்ந்து எழுதுவதற்கு மேஜை நாற்காலி, டிவி, நாளிதழ்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
தினமும் காலையில் சப்பாத்தி, பொங்கலும் மதிய உணவாக, சாப்பாடு, மோர், ரசம், பொறியல் வழங்கப்படும். இரவு சப்பாத்தி, சாப்பாடு ஆகியவை வழங்கப்படும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் மதியம் சிக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது அறையையொட்டி உள்ள பிளாக்கில் நடப்பதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல புழல் சிறையில் கண்ணப்பனுக்கும்முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications