கத்திப்பாரா பாலத்தின் 2வது பகுதி நாளை திறப்பு
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மேம்பாலத்தின் இன்னொரு பகுதியை முதல்வர் கருணாநிதி நாளை போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார்.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பிரம்மாண்ட மேம்பாலம் கட்ட 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.260 கோடி செலவில் இந்த பணியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்று, வேகமாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டது.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அடிக்கடி நேரில் வந்து பார்வையிட்டு பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தினார். அங்கு 4 வழியிலும் வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.
இதில் முதல் கட்டமாக மேம்பாலத்தின் மேல் பகுதியில் பணிகள் முடிவடைந்ததால் தாம்பரம்- வடபழனி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் பாலத்தில் சென்று வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் இதில் போக்குவரத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
2745 மீட்டர் நீளத்துக்கு செல்லும் அந்த ரவுண்டானாவில் தற்போது கிண்டி, போரூர், வடபழனி, தாம்பரம் செல்லும் வகையில் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி இந்த பாலத்தை நாளை திறந்து வைத்து சிறப் புரையாற்றுகிறார். இதற்கான விழா கிண்டி டெலிபிரிண்டர் வளாகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
டி.ஆர்.பாலு விழாவுக்கு தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், கே.எச்.முனியப்பா மற்றும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலை வகிக்கிறார்கள்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மேயர் மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் விழாவில் பேசுகிறார்கள்.