பசும்பொன்: ஜெவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு-விவரம் கோரும் நீதிமன்றம்
சென்னை: பசும்பொன்னில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறித்த முழு விவரத்தை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசும்பொன்னில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கார் உள்பட பாதுகாப்புக்கு வந்த கார்கள் மீது கல்வீச்சு நடந்தது.
இந் நிலையில் இன்று காலை அதிமுக வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில், நேற்று பசும்பொன்னிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்ற போது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. முறையான பாதுகாப்பு அளிக்காததால் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஏற்கனவே அவருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அவருக்கு இசட் பிளஸ் நிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதை பசும்பொன் சம்பவம் மூலம் உறுதியாகத் தெரிய வருகிறது.
பாதுகாப்பு மறு ஆய்வுக் கமிட்டி கூட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்க அரசு மறுக்கிறது.
உரிய பாதுகாப்பு தந்துள்ளோம் என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால், அரசின் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதிளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் செல்வம்,
ஜெயலலிதாவுக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு வழங்கினோம். யாரோ சிலர் திடீரென போலீஸ் வாகனம் மீது கல்வீசி உள்ளனர். நேற்றைய சம்பவத்தை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதி, பசும்பொன்னில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்த முழு விவரத்தையும் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணியை தாக்கல் செய்யச் சொல்லுங்கள்.
மேலும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பாதுகாப்பு மறு ஆய்வுக் கமிட்டி கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களை நவம்பர் 5ம் தேதி சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.