கல்வீசியது அதிமுகவினர் தான்-போலீஸ்
சென்னை: பசும்பொன்னில் கல்வீச்சில் ஈடுபட்டது அதிமுகவினரும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் தான் என கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடம் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காலையிலிருந்து அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் தேவர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாலையில் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஹெலிபேடிலிருந்து தேவர் நினைவிடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தேவர் நினைவிடத்திற்குள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது, அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் கூட்டம் உள்ளே நுழைய முயற்சித்தது.
அப்போது காவல்துறையினர் கூட்டத்தினரை தடுக்க முற்பட்டனர். ஆனால், கூட்டத்தினர் காவல்துறையினர் மீதும் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்கினர்.
காவல்துறையினர் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நான்கு கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் மற்றும் தடியடி நடத்தியும் கூட்டத்தை விரைவாக கலைத்து அமைதியை நிலைநாட்டினர்.
இந்த சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயமடைந்தனர்.
மேலும், சில காவல்துறை வாகனங்களும் மற்றும் அதிமுக பொதுச் செயலாளரின் 2 பாதுகாப்பு வாகனங்களும் சேதமடைந்தன. அதிமுக பொதுச் செயலாளர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி ஹெலிபேடுக்கு செல்லும்போது முழுமையான பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் இசட் பிளஸ்' பாதுகாப்பிற்கு உரியவர் என்பதால், அவருக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு குறைவு என்பது தவறு. ஒரு ஐ.ஜி, 2 டி.ஐ.ஜிக்கள் 2 எஸ்.பிக்கள் உள்பட 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 1,000 போலீசார் நினைவாலயத்திற்கு முன் நின்றபடி முன்னாள் முதல்வருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
இந் நிலையில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபரீதத்தை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இது திட்டமிட்ட செயலாகத் தெரியவில்லை என்றார்.
இதற்கிடையே கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.