மதுரையில் சீமான் அமீருக்கு பாராட்டு விழா!

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழ் திரை உலகம் சார்பில் கடந்த 19-ந் தேதி ராமேசுவரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும் பேசியதாக டைரக்டர்கள் அமீர், சீமான் ஆகியோரை ராமேசுவரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்து கோர்ட்டு உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ராமநாதபுரம் விரைவு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மதுரை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினந்தோறும் காலை நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி நேற்று காலை அமீர், சீமான் இருவரும் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
சீமானையும், அமீரையும் வரவேற்க இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலா, ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், மனோஜ்குமார், ராஜ்கபூர், பிரவீன்காந்த், முரளிதரன், சுப்பிரமணியசிவா, வெற்றிமாறன், நடிகர்கள் சேரன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சண்முகராஜா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் உள்பட திரைப்பட உலகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் நேற்று காலை மதுரை மத்திய சிறைக்கு வந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டையுடன் அங்கு திரண்டிருந்தனர்.
வக்கீல்கள் சந்திரசேகரன், அப்துல்லா ஆகியோர் ராமநாதபுரம் கோர்ட்டின் ஜாமீன் உத்தரவை சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதையடுத்து காலை 11 மணிக்கு டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
மாலை – கிரீடம்:
பாரதிராஜா தலைமையில் திரைப்பட உலகத்தினர் அனைவரும் சிறை வளாகத்தின் உள்பகுதிக்கு சென்று இருவருக்கும் சேர்த்து ஆளுயர ரோஜா மாலை ஒன்றை அணிவித்து அவர்களை வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது பேண்டு வாத்தியங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்து திரை உலகத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஒரு திறந்த வேனில் அமீர், சீமான் ஆகியோரை ஏற்றி நிற்க வைத்து அவர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா பொன்னாடை அணிவித்து மலர் கிரீடம் சூட்டினார். மற்ற இயக்குநர்கள் அனைவரும் அவர்களுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்களை அந்த வேனிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் டைரக்டர் அமீர், சீமான் ஆகியோரை வாழ்த்தியும் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.
'எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலியே!':
ஜாமீனில் விடுதலையான சீமான், அமீருக்கு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் பின்னர் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் பாரதிராஜா பேசும்போது, இலங்கை தமிழருக்காக சிறைக்கு சென்றுவந்த இவர்களின் பெயர்களை தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தமாக உள்ளது, என்றார்.
நடிகர் சேரன், டைரக்டர்கள் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, ராஜ்கபூர், கவிஞர் அறிவுமதி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்துக்கு வந்த நடிகர் வடிவேலு, சீமான், அமீர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications