மதம் மாறிய தலித்களுக்கு சலுகை கூடாது-பாஜக
சென்னை: மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கலாம் என ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கக் கூடாது என பாஜக கூறியுள்ளது.
ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைத்துள்ளதை கண்டித்து பாஜக சார்பில் பிரச்சார யாத்திரை நடைபெறுகிறது.
இந்த யாத்திரையை பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் இடஒதுக்கீட்டு பாதுகாப்பு பேரவை அமைப்பாளரான ராமநாத் கோவிந்த் இன்று சென்னையில் துவங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை வழங்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் தலைமையிலான கமிட்டியும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு, எஸ்சி பிரிவினருக்கு உள்ள சலுகைகளை வழங்கத் தேவையில்லை என்று முடிவெடுத்தனர்.
தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷன் தலைவராக உள்ள பூட்டா சிங்கும் கூட மதம் மாறியவர்களுக்கு சலுகைகள் கூடாது என்று கூறி வருகிறார்.
இந் நிலையில் காங்கிரஸ் அரசு ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை அமைத்து தாழ்த்தப்பட்ட பிரிவினரில் மதம் மாறியவர்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கலாம் என்று அறிக்கையை கேட்டுப் பெற்றுள்ளனர்.
இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இதை அமல்படுத்தினால் மத்திய அரசே மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக அமையும். எனவே இந்த பரிந்துரையை செயல்படுத்தக் கூடாது.
இதை வலியுறுத்தி தமிழகத்தில் விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை நடத்துகிறோம் என்றார்.
அப்போது பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications