வைகோ, கண்ணப்பன் விடுதலை
சென்னை: நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னையில் கடந்த மாதம் 21ம் தேதி நடந்த ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.
அதில் பேசிய வைகோவும், கண்ணப்பனும், தேச நலனுக்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் கைது
செய்யப்பட்டனர்.
22ம் தேதி சென்னையில் வைகோவும், 23ம் தேதி பொள்ளாச்சி அருகே கண்ணப்பனும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் 15 நாள் சிறைக் காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களின் சிறைக் காவல் முடிவடைவதையொட்டி இருவரும் இன்று சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் மதுக்கர் டிராவிட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கியூ பிரிவு போலீஸ் எஸ்.பி. தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்குக்குத் தேவையான ஆவணங்களும், ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு விட்டன. புலன் விசாரணையும் முடிந்து விட்டது.
எனவே இருவரின் காவலையும் நீட்டிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இருவரும் சம்மன் அனுப்பினால் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதும் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications