தேனி அருகே பல கோடி அளவுக்கு நில மோசடி
தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஆள் மாறாட்டம் மூலம் பல கோடி ரூபாய் நில மோசடி செய்து கோடிக் கணக்கில் சிலர் வங்கி கடன் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையன் (60).
மகளின் திருமண செலவிற்காக தனது நிலத்தை காட்டி கடன் வாங்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் வில்லங்க சான்று வாங்கி வர அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதன்படி சுப்பையன் பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற போது, அங்கு சுப்பையனின் நிலம் வேறு ஒருவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு பவுன்ராஜ் என்பவருக்கு பவர் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர் மூலம் வடுகபட்டியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு கிரயம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் சுப்பையன் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் விசாரித்த போது சுப்பையனுக்கு சொந்தமான 6.50 ஏக்கர் நிலமும் அவரின் பெயரில் தான் இருந்துள்ளதும், ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் போலியாக பட்டா தயாரித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.
இதேபோல சுமார் 42 விவசாயிகளுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம், ஆள் மாறாட்டத்தின் மூலம் திருப் பூரைச் சேர்ந்த சோமசுந்தரம், நரேஸ்பாபு, விஜய் ஆனந்த், சுஜாதா, நாச்சம்மாள், லோக நாதன் ஆகியோர் பெயர்களில் 2 பத்திரங் களாக பதிவு செய்யப்பட்டு தேனி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.2 கோடியே 10 லட்சம் வரை கடனும் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இதே போன்று சிலரது நிலங்கள் மோசடி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.
இச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications