கடலில் மூழ்கும் அபாயம் - இந்தியாவுக்கு இடம் பெயருமா மாலத்தீவு?

உலக வெப்பமயாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பனி மலைகள் உருகுவதால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால்,மாலத்தீவு உள்ளிட்ட பல தீவுப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மாலத்தீவு இன்னும் 50 ஆண்டுகளில் மூழ்கி விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் நிலத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்தும் திட்டம் அந்த நாட்டு அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் இப்போதைக்கு அந்தத் திட்டம் எதுவும் இல்லை என்று மாலத்தீவுகளின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முகம்மது நஷீத் தெரிவித்துள்ளதாக மாலத்தீவுக்கான இந்திய தூதர் அரவிந்த் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போதுதான் முகம்மது நஷீத் அதிபராகியுள்ளார். மாலத்தீவுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டில் நிலத்தை வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்த அவர் தீர்மானித்துள்ளார். இருப்பினும் அவர்களது பட்டியலில் இந்தியா இல்லை என்றார்.
சமீபத்தில் நஷீத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ஹூசேன் ஜகி அளித்த ஒரு பேட்டியில், அருகில் உள்ள ஏதாவது நாட்டில் நிலத்தை வாங்கி அங்கு மாலத்தீவு மக்களை குடியமர்த்தும் திட்டம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இது மிகவும் அவசரமான, அவசியமான ஒரு நடவடிக்கை என்றும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
உலகிலேயே மிகவும் குட்டி நாடு மாலத்தீவுதான். இந்தத் தீவின் உயரமான பகுதியே, கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கடல் பகுதியில் ஆண்டுக்கு 60 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications