சண்டையை தூண்டி விட்டேனோ?-கருணாநிதி மீது அவதூறு வழக்கு-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி, சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களின் இரு சாரரையும் நான் தூண்டிவிட்டு சண்டை போடச் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்றது காவல் துறையினரின் கண் முன்பு இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் காவல் துறையினரின் வேடிக்கைப் பார்க்கும் போக்கைக் கண்டித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரும் இந்தச் செயலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், காவல் துறையின் மெத்தனத்திற்கு என்ன காரணம்? கல்லூரி முதல்வர் எங்கே தவறியிருக்கிறார்? இதனுடைய மொத்த விளைவு என்ன? மாணவர்கள் மத்தியிலே என்ன புகைந்திருக்கிறது? என்பதையெல்லாம் ஆய்ந்து அறிக்கை அளிக்க திமுக அரசால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோதல் குறித்து வேறு ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் சூழ்நிலையில், ஒரு முதல்வர் இது போன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கலாமா?
நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு பொருள் குறித்து முதல்வர் கருணாநிதி நீதிமன்றத்திற்கு வெளியே கோயம்புத்தூரில் பேட்டி அளித்திருப்பதன் மூலம், விசாரணை ஆணையத்தின் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீதிபதிக்கு அறிவுறுத்துகிறாரோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது போன்ற பேட்டி நீதிமன்றத்தையும், புலனாய்வு அமைப்பையும் மிரட்டுவதோடு மட்டுமல்லாமல், வழக்கையே திசை திருப்புவதாக அமைந்துள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினையில் தேவையில்லாமல் என் மீது வீண்பழி சுமத்தும் வகையில் பேட்டி அளித்துள்ள முதல்வர் கருணாநிதியின் மீது நான் அவதூறு வழக்கு தொடருவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications