சட்டக் கல்லூரி வன்முறை: தூண்டி விட்ட முக்கியப் புள்ளி சிக்குகிறார்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்களை தூண்டி விட்டு, அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய முக்கிய அரசியல் புள்ளி விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த பயங்கர வன்முறைச் சம்பவம் தொடர்பாக எழுந்த கடும் கண்டனத்தைத் தொடர்ந்து காவல்துறை தற்போது சுறுசுறுப்புடன் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து வருகிறது.
இதுவரை 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மற்றவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், சென்னை அண்ணா நகர் பாடிக்குப்பத்தைச் சேர்ந்த இளமுகில், மதுராந்தகம் பிரேம்குமார், உளுந்தூர்பேட்டை இளையராஜா ஆகியோர் நேற்று கைதானவர்கள்.
இவர்களும், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மதுரை சிவகதிரவன், ராஜா, பிரேம்நாத் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி பரமராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது தலைமறைவாக உள்ள மேலும் 15 மாணவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களில் சிலர் முக்கியப் புள்ளிகளின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மாணவர்களை கலவரத்திற்குத் தூண்டியும், ஆயுதங்கள் வழங்கியும் பின்னணியில் இருந்த முக்கிய அரசியல் புள்ளி குறித்த தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவரும் கைது செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைத் திட்டம் பிறந்த இடம் கல்லூரி விடுதி என்பதால் அதில் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று சட்டக் கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications