புலிகள் கடும் தாக்குதல்-நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலி?
கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. விமானப்படையின் துணையுடன் கடந்த பல நாட்களாக ராணுவம் போராடி வருகிறது. முதலில் கிளிநொச்சி நகருக்கு அருகில் வந்து விட்டோம் என்று கூறினர். ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் அதிரடியான போர்த் திட்டங்களை வகுத்து இலங்கை ராணுவத்தினரை தற்போது நிலை குலைய வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 முனைகளில் ராணுவம் தாக்குதலை தொடுத்து வருகிறது. கிளிநொச்சிக்கு வடக்கில் இருந்து ஒரு படையும், தெற்கில் இருந்து ஒரு படையும் மேற்கு பகுதியில் இருந்து மற்றொரு படையும் கிளிநொச்சியை நெருங்கி வருகிறது.
ஆனால் மூன்று முனைகளிலும் அவர்களின் முன்னேற்றத்தைத் விடுதலைப் புலிகள் தொடர்ந்து பல வார காலமாக தடுத்து போரிட்டு வருகின்றனர்.
வடக்கு பகுதியில் முகமாலை வழியாக முன்னேறி வந்த சிங்கள படையை விடுதலைப்புலிகள் அதிரடியாக தாக்கினார்கள். இதில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை நடந்த சண்டையில் மட்டும் 36 சிங்கள வீரர்கள் பலியானார்கள். 90 பேர் காயம் அடைந்தனர்.
அதற்கு முந்தைய நாள் சண்டையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இதே போல தெற்கு முனையில் மாங்குளம் என்ற இடத்திலும் கடும் சண்டை நடந்து வருகிறது. அங்கும் ஏராளமான சிங்கள வீரர்கள் பலியானார்கள்.
கிளிநொச்சி பகுதியில் கடந்த 3 நாட்கள் நடந்த சண்டையில் மட்டுமே 200 சிங்கள வீரர்கள் பலியாகி இருப்பதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
மாங்குளம் இன்னும் வீழவில்லை?:
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை ராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.
ராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.
ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் ராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன.
ராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெரியவில்லை.
ஆனாலும் 3 நாள் போரில் சிங்கள வீரர்கள் 200 பேர் பலியாகி இருப்பதாக இலங்கை பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.