சீமான்-அமீர் ஜாமீன் ரத்து கோரிய மனு தள்ளுபடி
மதுரை: இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்ய்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போராட்டத்தின்போது பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் இயக்குநர்கள் சீமானும், அமீரும்.
நிபந்தனை ஜாமீனின்படி மதுரையில் தங்கி அவர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்களது ஜாமீனை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.என். பாஷா, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், கீழ் நீதிமன்றம் அளித்துள்ள ஜாமீன் சரியானதுதான்.
சாட்சியைக் கலைத்தார், தலைமறைவானார் என்று ஏதாவது காரணம் இருந்தால் ஜாமீனை ரத்து செய்யலாம். ஆனால் இயக்குநர்கள் இருவரின் விஷயத்திலும் அப்படி எதுவும் இல்லை. அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை.
எனவே இயக்குநர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை.
இருப்பினும் இரு இயக்குநர்களும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து டிவிக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ பேட்டி எதுவும் அளிக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications