மலேசியா-அரசு வேலையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பு

இதன் மூலம தற்போது உள்ள 3.4 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு இனிமேல் 7 சதவீதமாக இருக்கும்.
இதுதொடர்பான முடிவை பிரதமர் அப்துல்லா படாவி நேற்று எடுத்ததாக மனித வளத்துறை அமைச்சர் டி.எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தங்களுக்கும் உரிமை வேண்டும் என மலேசியா வாழ் வம்சவாளி இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக அங்கு போராட்டங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தை இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹின்ட்ராப்) மேற்கொண்டது என்பது நினைவிருக்கலாம்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் தாங்கள் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுவதைக் கண்டித்து கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில், அரசு வேலைவாய்ப்பில், இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சுப்ரமணியம் கூறுகையில், இதுதவிர அரசு வேலைக்கு விண்ணப்பிப்போரின் மனுக்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும் எனவும் பிரதமர் படாவி உறுதியளித்துள்ளார் என்றார்.
பிரதமர் நடத்திய இந்தக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு தவிர, பதவி உயர்வு, தமிழ் பள்ளிகளின் பிரச்சினைகள், குழந்தைகளுடன் தனித்து வசிக்கும் தாய்மார்களின் பிரச்சினகைள், இந்தியர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் படாவி வெளியிட்ட ஒரு அறிக்கையில், அரசுப் பணிகளில், இந்திய வம்சாவளியினரை குறைந்தது 7 சதவீத அளவுக்கு எடுக்க வேண்டும் என்ற உத்தரவு, அரசுப் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்ப்பபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது மலேசிய அரசு வேலைகளில் பெரும்பாலும் மலாய் இனத்தவரே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.












Click it and Unblock the Notifications