சோமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய கப்பல் ஊழியர்கள்
மும்பை: சோமாலியா கடற் கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐந்து கப்பல் ஊழியர்களும் இன்று மும்பை வந்து சேர்ந்தனர்.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் அவர்கள் கடற் கொள்ளையர்களின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
எம்.டி. ஸ்டோல்ட் வேலர் என்ற கப்பலை கடந்த செப்டம்பர் 15ம் தேதி சோமாலியா கடற் கொள்ளையர்கள் சிறை பிடித்தனர். அந்தக் கப்பலில் இருந்த 22 ஊழயர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். அனைவரும் சோமாலியாவில் உள்ள எயில் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுடன் பேச்சு நடத்தப்பட்ட பெரும் தொகை கொடுக்கப்பட்டது. இதையடுத்து கப்பல் ஊழியர்களை சோமாலியா கடற் கொள்ளையர்கள் விடுவித்தனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் 18 பேர் இந்தியர்கள் ஆவர். இவர்களில் நவீத் புரந்தோகர், இசிதோர் பெர்னாண்டஸ், அலிஸ்டர் பெர்னாண்டஸ், ஓம் பிரகாஷ் சுக்லா, சந்தோஷ் பாட்டீல் ஆகியோர் இன்று மஸ்கட் வழியாக மும்பை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தில் ஐந்து பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர்.
விரைவில் மற்ற இந்தியர்களும் மஸ்கட்டிலிருந்து அவரவர் ஊர்களுக்கு வந்து சேருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவிலிருந்து மீண்டு தாயகம் திரும்பியுள்ள இசிதோர் கூறுகையில், நாங்கள் சிறை பிடிக்கப்பட்டது முதல் பதட்டத்துடனேயே இருந்தோம். கப்பலிலேயே நாங்கள் தங்க வைக்கப்பட்டோம். கடற் கொள்ளையர்களின் பிடியில்இருந்தபோது நான் நான்கு முறை எனது குடும்பத்தினருடன் பேச முடிந்தது என்றார். இவர் கப்பலின் தலைமை சமையல் காரராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த காலங்களில் நான் பலமுறை ஏடன் வளைகுடா வழியாக பயணப்பட்டுள்ளேன். ஐந்து கப்பல்களி்ல் நான் பயணித்துள்ளேன். ஆனால் இப்போதுதான் இப்படி ஒரு மோசமான அனுபவம் கிடைத்தது.
கப்பலில் உள்ள பாலம் போன்ற பகுதியில் எங்களை தினசரி உட்கார்த்தி வைத்து விடுவார்கள். கடற் கொள்ளையர்களுக்கு 9 நாட்கள் நான்தான் உணவு சமைத்துக் கொடுத்தேன். பிறகு வேறு சமையல்காரரை அவர்கள் ஏற்பாடு செய்து கொண்டனர்.
பிணையாட்களாக இருந்த காலத்தில், அனைவருக்கும் சிறிதளவே உணவு கிடைத்தது. இருப்பினும் போதுமான அளவில் உணவு கிடைத்தது என்றார்.
அலிஸ்டர் கூறுகையில், 24 மணி நேரமும் நாங்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தோம். கடற் கொள்ளையர்களின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றார்.